சென்னை: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கந்தசஷ்டி கவசம் விவகாரத்தில் கைதானவர்களுள் கார்த்திக் என்பவரும் ஒருவர்.
வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக காவல்துறை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு கறுப்பர் கூட்டம் மறுப்பு தெரிவித்துள்ளது. யூடியூப் நிறுவனம் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் டாலரில் தான் பணம் அனுப்புவார்கள் என கறுப்பர் கூட்டம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக சந்தேகித்தால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என கறுப்பர் கூட்டம் தெரிவித்துள்ளது.
ஒரே வழக்குக்காக ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கறுப்பர் கூட்டம் சுரேந்தர் மீதான குண்டர் சட்ட வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் இந்த கேள்வி எழுப்பியுள்ளது. கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக சித்தரித்த புகாரின் பேரில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.