அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் பல கோடி செலவில் அமைக்கப்பட்ட துணை மின்நிலையம் துருப்பிடித்து வருகிறது. எனவே பணிகளை முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை செய்யும் கரும்பு கழிவிலிருந்து மின்உற்பத்தி செய்ய கடந்த 2010ம் ஆண்டு ரூ.100 கோடி செலவில் 110 மெகாவாட் மின்உற்பத்தி துணை மின்நிலைய பணிகள் துவங்கியது. இதனை ஒரு வடநாட்டு கம்பெனிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு அந்நிறுவனம் 75 சதவீத கட்டுமான பணிகளை முடித்து கொடுத்தது. அதன்பின் எந்த காரணத்தினாலோ இப்பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் ஏற்கனவே முடிந்த மின்உற்பத்தி நிலைய கட்டுமான பகுதிகள் தற்போது ஒவ்வொன்றாக துருப்பிடித்து உடைந்து விழுகிறது. இதனை மறுசீரமைப்பு செய்ய மேலும் பல கோடி செலவாகும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ரூ.100 கோடி வரை செலவழித்து மின்உற்பத்தி தொடங்க கூடிய நிலையில் தற்போது மேலும் பல கோடி செலவாகும் என்பதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க, மறுபுறம் கரும்பு உற்பத்தி வெகுவாக குறைந்ததும் மின்உற்பத்திக்கு தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆலையில் கரும்பு பதிவு இல்லாத காரணத்தினால் அரவை நிறுத்தப்பட்டது. மேலும் கரும்பு அரவை செய்த விவசாயிகளுக்கு நிலுவை பணமும், ஆலை பணியாளர்களுக்கு சம்பள பாக்கியும் பல கோடி வழங்க வேண்டியுள்ளது. இதனால் இந்த ஆண்டு அரவை துவங்க தேவையான கரும்பு பதிவிற்கு அதிகாரிகள் விவசாயிகள் வீடு தேடி சென்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி கரும்பு விவசாயிகள் கூறுகையில், ‘தென்மாவட்ட விவசாயிகளின் முக்கிய தொழில் மையமாக விளங்கிய அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இன்று தமிழக அரசின் பாராமுகத்தால் அழிவின் பிடிக்கு சென்று வருகிறது. எனவே விவசாயிகளின் நிலுவை தொகையும், தொழிலாளர்களின் சம்பள பாக்கியையும் அரசு ஏற்று கொண்டு ஆலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேபோல் ஆலையில் துருப்பிடித்து எலும்புக்கூடாய் காட்சியளிக்கும் துணை மின்நிலைய கட்டுமான பணிகளை முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’ என்றனர்.