குன்னூர்: குன்னூர் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. குன்னூர் நகராட்சியில் மறு சுழற்சி மற்றும் விற்பனை செய்ய இயலாத தினசரி உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை, சுமார் 200 கிலோ எடை கொண்ட உயர் அழுத்த பொதிகளாக மாற்றி, அதனை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து குன்னூர் நகராட்சி ஆணையாளர் பாலு கூறியதாவது: குன்னூர் நகராட்சியில் மறு சுழற்சி மற்றும் விற்பனை செய்ய இயலாத தினசரி உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சுமார் 100 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட பிளாஸ்டிக்கால் ஆன தடுப்புச்சுவர் உரம் தயாரிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இத் திட்டம் வெற்றியடைந்தால் மண் சரிவு ஏற்படும் இடங்களில் தடுப்புச்சுவர்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும். இது நீலகிரி மாவட்டத்தில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன் உள்ளதாக மாற்றக்கூடிய புது முயற்சியாகும். குன்னூர் நகராட்சியில் கடந்த 7 மாதங்களில் 100 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.