ஆலங்குளம்: தென்காசி மாவட்டம், நாட்டார்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன். இவரது மனைவி சித்ரா (36). இவர் பாவூர்சத்திரத்தில் பழக்கடை நடத்தி வந்தார். சித்ராவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகியுள்ளது. இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளும் அவர்களுடன் வசித்துவந்தார். இந்நிலையில் சித்ராவின் மகளுக்கு முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா அவரிடமிருந்து பிரிந்து தனியாக மகளுடன் வசித்துள்ளார். முருகன் அங்கும் வந்து மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சித்ரா இதுகுறித்து நேற்று ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சித்ராவையும், முருகனையும் நேற்று மாலை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்து மாலை 4.30 மணிக்கு வெளியே வந்த சித்ராவிற்கும், முருகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவின் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். வயிற்றில் குத்திய கத்தியை வெளியே எடுக்காத நிலையில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு ரத்தவெள்ளத்தில் சித்ரா அலறினார். போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயிற்றில் குத்திய கத்தியுடன் ஆம்புலன்சில் வந்த சித்ரா வழியிலேயே பரிதாபமாக இறந்தார். முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.