×

சுற்றுலா, உணவகங்கள், ரியல் எஸ்டேட் துறைகளை மீண்டெழ செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா, உணவகங்கள், விருந்தோம்பல், ரியல் எஸ்டேட் துறைகளை மீண்டெழ செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மீண்டெழுதல் செயல்முறைக்கு வலுவூட்டும் விதமாக, மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளின் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கக் கூடாதென்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக கூறினார்.

தற்போதைய நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வர அரசு, ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் தொழில்களுக்கு இடையேயான சிறப்பான ஒத்துழைப்புக்கு இதை விட சிறந்த காலம் இருக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுலா, உணவகங்கள், விருந்தோம்பல், ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய நிதி அமைச்சர், பொருளாதாரத்தின் மீது பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய முக்கிய துறைகள் இவை என்று தெரிவித்தார். இவற்றில் சில துறைகளின் பாதிப்பைக் குறைக்கும் விதத்தில், உணவகங்கள், விழா அரங்கங்கள் மற்றும் இவை தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் வகுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

உள்நாட்டு உற்பத்தி குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், முக்கிய மொத்த மருந்துகள் மற்றும் செயல்மிகு மருத்துவப் பொருள்கள் ஆகியவற்றின் தயாரிப்பை 6 மாநிலங்களில் பெருக்க இது உதவியதாகவும் கூறினார்.

அரசு முகமைகளின் தாமதப் பணப்பட்டுவாடாவை பொருத்தவரையில், நிலுவையில் உள்ள கட்டணங்களைத் தொழில்களுக்குச் செலுத்துவதை துரிதப்படுத்த தொடர் ஆய்வுகளை நிதி அமைச்சகம் நடத்துகிறது. மேலும், வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்துவதில் உள்கட்டமைப்புத் துறை முக்கிய பங்காற்றுவதாகவும், எனவே அதன் நிதி வசதிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக வெளிப்புற நிதிகளும் வரவேற்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.



Tags : restaurants ,Nirmala Sitharaman ,Corona , Nirmala Sitharaman, Corona
× RELATED பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை...