கொள்ளிடம்: கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு இதுவரை தண்ணீர் வந்து சேராததால் விவசாயிகள் நேரடி விதைப்பு செய்ய திட்டமிட்டு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைமடை பகுதியாக உள்ளது. இப்பகுதியில் பிரதான பாசன வாய்க்கால்களாக புது மண்ணியாறு, தெற்கு ராஜன் வாய்க்கால் மற்றும் பொறை வாய்க்கால் ஆகியவைகள் பிரதான வாய்க்கால்கள் ஆக உள்ளது. இந்த மூன்று வாய்க்கால்களில் புதுமண்ணி ஆற்றில் மட்டும் கடந்த ஆடிப்பெருக்கு அன்று தண்ணீர் வந்து சில தினங்களில் நின்றுவிட்டதால் வாய்க்கால் வறண்டு கிடக்கிறது.மேலும் தெற்குராஜன் வாய்க்கால் மற்றும் பொறைவாய்க்கால் ஆகியவைகளும் தற்போது வறண்டு கிடக்கின்றன. கொள்ளிடம் கடைமடை பகுதி விவசாயிகள் இதுவரை மேட்டூர் தண்ணீரை நம்பி எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். எனவே மேட்டூர் தண்ணீர் வருவது காலதாமதமாகி விட்டதால் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம, நல்லூர், மகேந்திரப்பள்ளி, ஆலங்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 2000 ஏக்கர் நிலங்களில் நேரடி விதைப்பு செய்ய திட்டமிட்டு நிலங்களை உழவு செய்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மேட்டூர் தண்ணீரை நம்பி ஏமாந்து விட்டோம். எனவே எதிர்பார்த்த அளவு குறுவை நெல் பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இனிமேலாவது நேரடி விதைப்பு செய்ய மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை வழங்கினால் நேரடி விதைப்பை யாவது காப்பாற்ற முடியும். எனவே உடனடியாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறை சார்பில்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.