திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களின் விபரங்களை ேபாலீசார் ேசகரித்து வருகின்றனர்.திருவண்ணாமலையில் தனியாக தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கைது செய்யப்பட்ட சாமியார் மணிகண்டனிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:கடந்த ஒரு மாதமாக சைக்கிளில் தனியாக வெளிநாட்டுப் பெண் செல்வதை நோட்டமிட்டு, அவரது வீட்டுக்குள் புகுந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கடந்த நான்கு மாதங்களில் மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட புதுப்புது சாமியார்கள், திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலப்பாதையில் தங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
எனவே, கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களின் முழுமையான விபரங்களை சேகரிக்க எஸ்பி அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கிரிவலப்பாதையில் செங்கம் இணைப்பு சாலை, திருநேர் அண்ணாமலை கோயில், அடி அண்ணாமலை, அஷ்ட லிங்க சன்னதிகள் போன்ற இடங்களில் தங்கியுள்ள சாமியார்களின் விபரங்களை போலீசார் சேகரிக்க தொடங்கியுள்ளனர்.தொடர்ந்து பல ஆண்டுகளாக இங்கிருப்பவர்கள் மற்றும் புதியதாக வந்த சாமியார்கள் எங்கிருந்து வந்தனர், அவர்களுடைய பின்னணி என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதேபோல், திருவண்ணாமலையில் தங்கியுள்ள வெளிநாட்டினர், தங்களுடைய விபரங்களை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் தெரிவிக்க வேண்டும்.
அவர்களை தங்க வைத்திருப்பவர்களும் தகவல் அளிக்க வேண்டும் என ஏற்கனவே போலீசாரால் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், வெளிநாட்டினர் குறித்த முழுமையான விபரங்கள் போலீசிடம் இல்லை என கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டினர் தங்குவதாக தெரிவிக்கப்படும் முகவரிக்கும், தங்கியிருக்கும் முகவரிக்கும் வித்தியாசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.கொரானா பரவல் தொடங்கிய பிறகு, பெரும்பாலான வெளிநாட்டினர் தங்களுடைய நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். ஆனாலும், ெதாடர்ந்து இங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரின் விபரங்களை சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.