×

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி கஞ்சித்தொட்டி திறந்து விவசாயிகள் போராட்டம்: தாராபுரம் அருகே பரபரப்பு

தாராபுரம்:தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள், கிராம மக்கள் கால்நடைகளுடன் வந்து கஞ்சித்தொட்டி  திறந்து நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிஏபி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு வரும் தண்ணீர் மூலம் ஆண்டுதோறும் 6060 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியும், 7 ஊராட்சிகள்  சேர்ந்த 17 கிராமங்கள் குடிநீர் வசதியும் பெற்று வந்தது.    இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடுவதில்  பொதுப்பணித்துறையினர் பாரபட்சம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். உப்பாறு அணையில் தண்ணீர் திறக்கக்கோரி பாசன விவசாயிகள் தாராபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தை கடந்த 12ம் தேதி முற்றுகையிட்டு  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறையின் வாட்டர் பட்ஜெட், நீர் பங்கீட்டு ஆய்வுக்கூட்டம் முடிந்ததும்  அணைக்கு தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்,ஆனால், தற்போது வரை அணையில் தண்ணீர் திறக்கவில்லை. இதைக் கண்டித்து  திருப்பூர் மாவட்ட உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அர்ஜூனன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராம மக்கள், ஆடு,  மாடுகளுடன் உப்பாறு அணையில் திரண்டு நேற்று கஞ்சித்தொட்டி திறந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் டி.எஸ்.பி. ஜெயராமன், உடுமலை கோட்டாட்சியர் ரவிக்குமார், குண்டடம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன்,  தாசில்தார் கனகராஜன், பொதுப்பணித்துறை மண்டல துணை அதிகாரி காஞ்சித்துரை, துணை பொறியாளர் பிரசாந்த் ஆகியோர் போராட்டத்தில்  ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பி.ஏ.பி. அணையில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்காமல் அணை வளாகத்தை விட்டு வெளியேற மாட்டோம் என பிடிவாதத்துடன்  அனைவரும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அதன்பின் அதிகாரிகள், தற்போதுள்ள நீர் இருப்பில் பிஏபி பாசன விவசாயிகளுக்கு நான்கு நனைப்புகளுக்கான தண்ணீரை திறந்துவிட்ட பின், அடுத்த  மாதம் பி.ஏ.பி. அணைக்கு வந்து சேரும் தண்ணீரில் உப்பாறு அணைக்கு முழுமையாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக  உறுதி அளித்ததை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.



Tags : dam ,Upparu ,Tarapuram ,Upparu Dam , Upparu Dam, open , , porridge tank, Tarapuram, Stir near
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்