மும்பை: மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 80க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள கஜல்புரா பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று நேற்று மாலை 7 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. தரைத்தளம் மற்றும் 4 மாடிகள் அடங்கிய இந்த கட்டிடத்தில் மொத்தம் 45 குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாகவே இங்கு கனமழை பெய்து வந்த நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளதாக மாநில அமைச்சர் அதிதி தாட்கரே தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘மகாராஷ்டிரா மாநிலம் ரெய்காட் மாவட்டத்தின் மஹத் தாலுக்காவை சேர்ந்த கஜல்புரா பகுதியில் நேற்று மாலை 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளதாகவும், இடிபாடுகளில் 100க்கு மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. மும்பையில் இருந்து சுமார் 4 மணி நேர பயண தூரத்தில் இருக்கும் இந்த பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 3 குழுவினர் விரைந்தனர். மீட்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து விதமான கருவிகள், மோப்ப நாய்கள் மற்றும் தளவாடங்களுடன் அவர்கள் சென்றுள்ளனர்’ என்றார்.
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தைகள் மற்றும் பெண்களை என பலரை உயிருடன் மீட்டனர்.நேற்று இரவு தொடங்கி தற்போது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டவர்களை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர். இவர்களில் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் மேல்சிகிச்சைகாக மும்பை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.