சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீசில் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் கடந்த 11ம் தேதி நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் ஒன்று அளித்தார். அதில் தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி. சேகர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அந்த புகாரின்படி மாநகர மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி நடிகரும் பாஜ பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது ‘தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் பிரிவு(II)’ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதைதொடர்ந்து நடிகர் எஸ்.வி.சேகரை நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் சம்மன் அனுப்பினர். அதன்படி நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று காலை 10.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். பின்னர் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடிகர் எஸ்.வி.சேகரிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் உதவி கமிஷனர் வேல்முருகன் விசாரணை நடத்தினர். 3 மணி நேரம் நடந்த விசாரணையில் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.அதில் தேசிய கொடியை அவமதித்தது மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவமரியாதையாக பேசியது உள்ளிட்ட கேள்விகளும் கேட்டப்பட்டது. அதற்கு நடிகர் எஸ்.வி.சேகர் அளித்த பதிலை உதவி கமிஷனர் வேல்முருகன் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டார்.