×

ராகுல் காந்தி எந்த தாமதமும் இன்றி உடனடியாக கட்சி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல்

புதுடெல்லி: ராகுல் காந்தி உடனடியாக கட்சி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும், கட்சியில் பல்வேறு சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடத்தப்பட்டது.

அப்போது, காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும் படியும், தனக்கு மாற்றாக வேறு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் என சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேசிய ராகுல்காந்தி தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களை கடுமையாக விமர்சித்தார். கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, குலாம் நபி ஆசாத் தான் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களின் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் ராகுலின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் பாஜவுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், உடனடியாக அந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே மறுத்து கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல், அதிருப்தியாளர்களை மறைமுகமாக சாடினார். மேலும், குலாம் நபி  ஆசாத், முகுல் வாஸ்னிக், ஆனந்த் சர்மா ஆகியோரை பெயர் குறிப்பிட்டு பேசிய அகமது படேல், முக்கிய பொறுப்புகளில் இருந்துகொண்டு இதுபோன்ற கடிதங்களை எழுதியிருக்கக் கூடாது என்றும் ராகுல் காந்தி எந்த தாமதமும் இன்றி உடனடியாக கட்சி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும், எனவும் கூறியுள்ளார்.

Tags : Ahmed Patel ,Rahul Gandhi ,party leader ,Congress , Congress, President, Rahul Gandhi, Sonia Gandhi, Ahmed Patel
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...