×

சிறைவாசிகளை திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா ? : உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்தேகம்!!

சென்னை : சிறைவாசிகளை திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா என பெண்கள் ஆணையம் ஆய்வு செய்யும் நடைமுறை உருவாக்கப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கோவை சிறையில் அஸ்லாம் என்ற கைதி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது மனைவி சம்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், எனது கணவர் கடந்த 20 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் பரோலில் வந்தபோது எனக்கும் அஸ்லாமுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாளிலேயே தனது கணவர் சிறைக்கு திரும்பி விட்டார். நான் இப்பொது என் மாமியாருடன் வசித்து வருகிறேன். எனவே தனது கணவருக்கு மீண்டும் பரோல் வழங்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் சம்மதத்துடன்தான் திருமணம் நடைபெற்றதா அல்லது நிர்பந்தத்தின் பேரில் நடைபெற்றதா என்பது தெரியவில்லை என நீதிபதிகள் சந்தேகம் தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள் கூறியதாவது, இந்த வழக்கு மட்டுமல்லாது இதுபோல் பல வழக்குகளில் சிறைவாசிகள் பரோலில் வந்து திருமணம் செய்துகொண்டு மீண்டும் சிறைக்கே திரும்பிவிடுகின்றனர். சிறைவாசிகளை திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் மனவேதனை மற்றும் கஷ்டங்களோடு தனியாக வாழ்வதை கற்பனை செய்யமுடியாதது. திருமணத்திற்கு முன்பு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டார்களா?சம்மதம் தெரிவித்தார்களா? அல்லது மத காரணங்களுக்காக நிர்பந்திக்கப்பட்டார்களா என்பதை பெண்கள் ஆணையம் ஆய்வு செய்யும் வகையில் புதிய நடைமுறை கொண்டு வரப்படவேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறைவாசியை திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் வாழ்க்கை முடங்கிபோய்விடும் என்றும்,உளவியல் மற்றும் உடல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தாமாக முன்வந்து, தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் மாநில பெண்கள் ஆணையம், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை செயலகம் ஆகியவற்றை பிரதிவாதியாக சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டு,வழக்கு விசாரணையை  வரும் 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Tags : women ,prisoners ,judges ,High Court Judges ,High Court , Are women forced to marry prisoners? : High Court judges doubt !!
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...