பழநி: வருடாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக பழநி கோயிலில் நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப்கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்காக தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது. இந்த ரோப்காரில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். ஒரு மாதம் நடைபெறும் இப்பணியில் ரோப்கார் பெட்டி சீரமைப்பு, இரும்புக்கயிறு மாற்றம், கீழ் மற்றும் மேல் தளங்களில் உள்ள ஷாப்ட் பழுது நீக்குதல் உள்ளிட்டவை நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான வருடாந்திர பராமரிப்பு பணிகள் நாளை துவங்குகிறது. இதன் காரணமாக நாளை (ஆக. 25) முதல் ஒரு மாதத்திற்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பழநி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கோயில் பணிகளுக்காக மட்டும் அவ்வப்போது ரோப்கார் இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.