×

முதலிபாளையம் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரசீர்கேடு

திருப்பூர்: திருப்பூர், முதலிபாளையம் செல்லும் ரோட்டில் இறைச்சிக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர், காங்கயம் ரோட்டில் இருந்து முதலிபாளையம் செல்லும் ரோட்டில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. முதலிபாளையம் பகுதியில் உள்ள இறைச்சி கடைக்காரர்கள் கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை மூட்டைகள் மூலம் சேகரித்து அவற்றை தினமும் இரவு நேரங்களில் ரோட்டின் ஓரத்தில் வீசி செல்கின்றனர்.

அவைகள் ஓரிரு நாட்களில் அழுகி, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், வேலைக்கு செல்பவர்கள் இப்பகுதியை கடந்து செல்லும்போது கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதேபோல் பனியன் நிறுவனங்களில் இருந்தும் பனியன் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி வாசிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆகவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mudalipalayam Sanitary , Mudalipalayam Sanitary, condition , meat waste dumped , roadside
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...