டெல்லி : முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு தினமான இன்று ”என்னுடைய நண்பனை பெரிதும் நான் இழந்து தவிக்கிறேன்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் ஆவார். இவர் உடல்நலக் கோளாறு காரணமாக தனது 66-வது வயதில் அருண் ஜேட்லி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி காலமானார்.
இந்த நிலையில் அருண் ஜேட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் அவரை நினைவுகூர்ந்து உருக்குமான கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டகருத்தில், “கடந்த ஆண்டு இதே நாளில், நாம் அருண் ஜேட்லியை இழந்துவிட்டோம். என்னுடைய நண்பனை பெரிதும் நான் இழந்து தவிக்கிறேன். இந்தியாவுக்காக விடாமுயற்சியுடன், இரவு பகலாக நாட்டுக்குத் தொண்டாற்றியவர் .அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம், சட்ட வல்லுநத்துவம், அன்பான ஆளுமையுடன் ஜேட்லி திகழ்ந்தவர். அவரின் நினைவாக நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கூறியதைத்தான் இங்கே பதிவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதே போன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “தேசத்தைக் கட்டமைக்க அருண் ஜேட்லி வகுத்த முடிவில்லா பல்வேறு மக்கள் நலக் கொள்கைகள், திட்டங்கள், எப்போதும் நினைவில் கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் அருண் ஜேட்லி நினைவாக அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.பிரதமர் மோடி தலைமையிலான முதலாவது அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதியமைச்சராகவும், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராகவும் ஜேட்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.