×

ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 நபர்களை மீட்டதற்காக, தஞ்சையைச் சேர்ந்த ஸ்ரீதருக்கு வீர, தீர செயலுக்கான விருது : ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது!!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 நபர்களை மீட்டதற்காக, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ஆர். ஸ்ரீதர் அவர்களுக்கு வீர, தீர செயலுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி முதல்வர் பழனிசாமி கௌரவித்தார்.
 
நீரில் மூழ்கி விபத்து, தீ விபத்து, மின்சார விபத்து, நிலச் சரிவுகள், விலங்குகளால் தாக்கப்படுதல் மற்றும் சுரங்க விபத்து போன்ற அபாயகரமான விபத்துக்களில் சிக்கியவர்களின் உயிர் மற்றும் உடைமைகளை காக்க தைரியமாகவும், மன வலிமையுடனும் விபத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய அரசால் ஜீவன் ரக்ஷா பதக்  என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  இவ்விருது பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைக் கொண்டதாகும்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள வெள்ளையன் ஏரியில்  குளிக்கச் சென்ற மூன்று பெண்கள்  மற்றும் மூன்று குழந்தைகள் ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், அவ்வழியாக சென்ற திரு.ஆர்.ஸ்ரீதர் அவர்கள், நீரில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக ஏரியின் கரைக்கு இழுத்து சென்று ஆறு பேரையும் காப்பாற்றினார். நீச்சலில் எவ்வித முறையான பயிற்சியை பெறாத நிலையில், 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உயிரை காக்க தனது உயிரைப் பணயம் வைத்து திரு.ஆர்.ஸ்ரீதர் அவர்கள் காப்பாற்றியுள்ளார்.  

இவ்வீர, தீர செயலுக்காக தமிழ்நாடு அரசு 2019-ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு இவரது பெயரை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது.  இப்பரிந்துரைக்கு மாண்புமிகு இந்தியக் குடியரசு தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திரு.ஆர். ஸ்ரீதர் அவர்களுக்கு 2019-ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்கள்.

இன்றையதினம் ஜீவன் ரக்ஷா பதக் விருது பெற்ற திரு. ஆர். ஸ்ரீதர் அவர்கள், 2019-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது, தமிழ்நாடு அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., பொதுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில் குமார், இ.ஆ.ப., பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) திரு. ஏ.ஆர். ராஹுல்நாத், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags : Sreedhar ,Thanjavur ,lake , Tanjore, Sridhar, Veera, Coastal Action, Award, Check
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...