×

பதவி வேண்டும் என்றால் கட்சிக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள்: ஓபிஎஸ் பேச்சால் அதிமுகவில் பரபரப்பு

பெரியகுளம்: ‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்;பதவி வேண்டும் என்றால் கட்சிக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள்’ என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கட்சி  ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் உயர்மட்ட பொறுப்பாளர்களான எனக்கோ, மற்ற யாருக்குமோ விசுவாசமாக இருக்க வேண்டாம். கட்சிக்கு விசுவாசமாக இருங்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை மட்டுமே கட்சி பொறுப்பாளர்களாக நியமிக்க முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது போல பல நூறு ஆண்டுகள் அதிமுக தொடர்ந்து இருக்க வேண்டும்.

கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும்’’ என்றார். கூட்டத்தில், தேனி எம்பி ரவீந்திரநாத்குமார் உட்பட நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளர்களுக்கு விசுவாசமாக இல்லாமல், கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என ஓபிஎஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : speech ,party ,OPS ,AIADMK , To be promoted, party, be loyal, OBS speech, AIADMK
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...