ஊத்துக்கோட்டை: ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு எம்சான்ட் என கூறி மணல் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் ஆற்று மணல் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்திரவின்பேரில், ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் ஏட்டுகள் அருண்குமார், அருள், விக்னேஷ் ஆகியோர் ஊத்துக்கோட்டை - ஆந்திர எல்லையில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த ஒரு லாரியை மடக்கி டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது, டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அதில், ஆற்று மணல் இருப்பது தெரிந்தது. இதனையடுத்து, ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மணல் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்து பொன்னேரி கல்லூரை சேர்ந்த டிரைவர் காமேஷ் (23) என்பவரை கைது செய்தனர். மேலும், லாரியின் உரிமையாளர் பிரகாஷ் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.