சென்னை: தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகளில் மீண்டும் அனைத்து வழித்தடங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு, வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஸ்டேக் ஸ்டிக்கர் எனப்படும் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதன் மூலம் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். இதன் மூலம் காலநேரம், எரிபொருள் விரயம் ஆவது மிச்சமாகும். இந்த திட்டத்துக்கான பாஸ்டேக் ஸ்டிக்கர் அனைத்து சுங்கச்சாவடியிலும் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 2.50 கோடிக்கு மேற்பட்ட பாஸ்டேக் ஸ்டிக்கர் விநியோகிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பல கோடி வாகனங்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் ஓடுகிறது. இதற்கு பாஸ்டேக் ஸ்டிக்கர் தட்டுப்பாடு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால், பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் மட்டும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதையும் மீறி சென்றால் கூட அந்த வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து, பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் மட்டும் செல்வதற்காக சுங்கச்சாவடிகளில் இரண்டு பக்கம் ஒரு பாதை மட்டுமே ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சுங்கச்சாவடிகளில் அனைத்து வழித்தடங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் மாற்றப்பட்டுள்ளது. இதனால், பாஸ்டேக் ஸ்டிக்கரில் பணம் இல்லாதவர்கள் ரொக்கமாக செலுத்தச் சென்றால் கூட அவர்களது ஸ்க்கர் ஸ்கேன் செய்யப்பட்டு, பணம் இல்லை எனக்கூறி, பாஸ்டேக் ஸ்டிக்கர் பிளாக் லிஸ்ட் செய்யப்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.