திருவனந்தபுரம்: கேரளாவில் சந்தன மரம் வெட்டி கடத்திய கும்பல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த இளம்பெண்ணை, கடத்தல் கும்பல் சுட்டுக் கொன்றது. கேரள மாநிலம், இடுக்கி அருகே உள்ளது மறையூர். இங்கு சந்தன ேதாப்புகள் அதிகமாக உள்ளன. மறையூர் சந்தனம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இங்கிருந்து தான் சந்தன மரங்கள் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி வருகின்றன. இந்த பகுதியை சேர்ந்த சிலர் கும்பலாக சேர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தனர். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு காளியப்பன் என்பவர், அந்த பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்தி வந்துள்ளார். இதை பார்த்த அவருடைய சித்தி சந்திரிகா (34) போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த காளியப்பன் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், போலீசில் தன்னை மாட்டிவிட்ட சித்தி சந்திரிகா மீது அவர் கடும் கோபத்தில் இருந்தார்.தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு காளியப்பன் உள்பட 3 பேர் சந்திரிகா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சந்திரிகாவிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது, அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளியப்பன் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து சந்திரிகாவை சரமாரியாக சுட்டார். இதில் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சந்திரிகா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த காளியப்பன் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், சுதாரித்த பொது மக்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து மறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.