×

ஆத்தூரில் போலி மது ஆலை கண்டுபிடிப்பு: சாராயத்தில் சாயம் கலந்து குவார்ட்டராக மாற்றி விற்பனை

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் மணிவிழுந்தான் காலனி பகுதியில் நேற்று மதியம், மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு ஆம்னி காரை மறித்து சோதனையிட்டனர். அதனுள் 3 கேன்களில் கள்ளச்சாராயம் இருந்தது. காரை ஓட்டி வந்த மணிவிழுந்தான்காலனி வசந்தபுரத்தை சேர்ந்த சந்திரசேகர்(53)  என்பவரை கைது செய்து விசாரித்தனர்.இதில், புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து கலர் சாயம் கலந்து குவாட்டராக தயாரித்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து சந்திரசேகரை, போலி மது ஆலை இயங்கிய தோட்டத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, மேலும் சில கேன்களில் கள்ளச்சாராயம் இருந்தது. ஏராளமான காலி குவார்ட்டர் பாட்டில்களும், மது கம்பெனி லேபிள்களும், சாராயத்தில் சாயம் கலந்து தயாரிக்கப்பட்ட 1,100 போலி குவார்ட்டர் பாட்டில்களும் இருந்தன. பாட்டிலில் மூடியை சரியாக மூட இயந்திரத்தையும் பயன்படுத்தி வந்தது தெரிந்தது. ஒட்டுமொத்தமாக 135 லிட்டர் சாராயம், 1,100 போலி மதுபாட்டில், இயந்திரம், 2 ஆம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வீட்டிற்கும் சீல் வைத்தனர். பிடிபட்ட சந்திரசேகரின் கூட்டாளிகள் புதுச்சேரியை சேர்ந்த திரு, பெங்களூருவை சேர்ந்த நிர்மல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Attur , Attur, fake distillery, liquor
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...