சென்னை: செயல்படாத சிறப்பு கோட்டங்களில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு பணிமாறுதல் செய்ய கண்காணிப்பு பொறியாளர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறை சார்பில் நீர்வள நிலவள மற்றும் அணைகள் புனரமைப்பு, சிறப்பு திட்டம், திட்டம் மற்றும் சாரா பணிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் திட்டப் பணிகள் நடக்கிறது. இப்பணிகளுக்காக கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு திட்டத்தின் கீழ் பணியாற்றி முடித்து இருப்பார்கள். அதன் பின்னர் அவர்களை வேறு திட்டங்களுக்கு மாற்றுவார்கள். ஆனால், அவ்வாறு செய்யாததால் 125க்கும் மேற்பட்ட கோட்டங்கள் செயல்படாத நிலையில், அங்கு பொறியாளர்கள் தினமும் பணிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். இது தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து, அவ்வாறு செயல்படாத கோட்டங்கள் மூட அறிவுரை வழங்கப்பட்டது. அதன்பேரில், 15 கோட்டங்கள் வரை மூடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறப்பு திட்ட பணிகள் முடிவடையும் பட்சத்தில் அங்குள்ள பொறியாளர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்றால் நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் (பொது) மற்றும் அரசு செயலாளருக்கு கோரிக்கை வைக்க வேண்டும். இதனால், பொறியாளர்களுக்கு அலைச்சல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறப்பு திட்டப் பணிகளை கண்காணிக்கும் பொறியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட கண்காணிப்பு பொறியாளர்களே மாறுதல் வழங்க அதிகாரம் அளித்து பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். இந்த கண்காணிப்பு பொறியாளர்களுக்கான அதிகாரம் கடந்தாண்டு மார்ச் 22ம் தேதி முதல் 2022 மார்ச் 21ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.