×

ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு..: நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக் கோரி அதிமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புதுடெல்லி: நடப்பு கல்வி ஆண்டிலேயே ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50% ஒட ஒதுக்கீடு தேவை என்று அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. மருத்துவப்படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக,மதிமுக,நாம்தமிழர் கட்சி, திக, இடதுசாரிகள் அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இளநிலை மருத்துவப்படிப்பில் 15%, முதுநிலை மருத்துவ படிப்பில் 50% இடங்களை மாநில அரசுகள் வழங்குகின்றன. உச்சநீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கத்தை ஏற்கமுடியாது.

மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களை பெற்றபோது அவற்றில் மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத எம்.சி.ஐ., மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத பிற நிறுவனங்களில் ஆட்சேபிக்க முடியாது. மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை. மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றக்கூடாது என எந்த விதிகளும் இல்லை. முப்பது ஆண்டுகள் முன்னர் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மத்திய அரசு ரிசர்வேசன் குறித்த சட்டத்தை கொண்டு வர முடியும்.

மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம், என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்,மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், எம்.சி.ஐ-யும் தீர்மானிக்க வேண்டும். மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத கல்வி நிறுவனங்களில் 50% ஒதுக்கீடு வழங்கலாம் என உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வித சட்டத்தையும் உருவாக்கவில்லை.

இடஒதுக்கீடு விவகாரம் குறித்து முடிவெடுக்க மாநில அரசு மற்றும் எம்.சி.ஐ. அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து முடிவெடுக்க வேண்டும். 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும், என உத்தரவிட்டனர். இந்த நிலையில், மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து அதிமுக தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கால தாமதம் தேவையில்லாதது. 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Tags : Supreme Court ,AIADMK , OBC, Reservation, AIADMK, Supreme Court, Appeal
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...