சென்னை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான திலீப், சரஸ்வதிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், நடப்பு 2020ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற உள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் தற்போது வெளியிட்டு இருக்கிறது. சிறப்பு பிரிவில் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற தேர்வாகி இருக்கின்றனர்.
அதில், தமிழகத்தில் இருந்து சென்னை அசோக்நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான திலீப், சரஸ்வதிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வளமான மாணவ சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணியாற்றி தேசிய நல்லாசிரியர் விருது- 2020க்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள திரு.திலீப் (சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி) மற்றும் திருமதி.சரஸ்வதி (சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி) ஆகியோருக்கு எனது உளம்நிறைந்த நல்வாழ்த்துகள்!, என கூறியுள்ளார்.