×

சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் உடல் வீச்சு: நெல்லையில் 2 திருநங்கைகள் உட்பட மூவர் கழுத்தை இறுக்கி கொலை: 3 பேர் கைது, பரபரப்பு தகவல்கள்

நெல்லை: நெல்லையை அடுத்த பேட்டை நரசிங்கநல்லூரில் திருநங்கைகள்  காலனி உள்ளது. இங்கு சுமார் 100 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். சுத்தமல்லியைச்  சேர்ந்த செய்யதலி மகள் ரேணுகா என்ற திருநங்கையும், சேலத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்ற  தங்கவேல் (30) என்பவரும் தம்பதிபோல்  வாழ்ந்து வந்தனர். இவர்களது எதிர் வீட்டில் உடன்குடியைச்  சேர்ந்த திருநங்கை பவானி (28), காரியாண்டியைச்  சேர்ந்த பெயின்டர் முருகன் (30) என்பவரும் தம்பதியாக வாழ்ந்து  வந்தனர். இந்தநிலையில், பவானி-முருகன் மற்றும் அனுஷ்கா ஆகிய 3 பேரை பலநாட்களாக காணவில்லை. இதனால், திருநங்கைகள் நேற்று சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு சென்று, பவானி-முருகன், திருநங்கை அனுஷ்கா ஆகிய 3 பேரையும் காணவில்லை என்று புகார் அளித்தனர்.

மேலும், சந்தேகத்தின்பேரில், ரிஷிகேஷ், அவரது டிரைவர் ராஜா, பைனான்ஸ் தொழில் செய்து வரும் ஸ்நோவின் (29) உட்பட 5 பேரை பிடித்து சுத்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 5 பேரிடமும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சரவணன் கூறியதாவது: பாளை மகாராஜநகர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு வீட்டை ரிஷிகேஷ் வாடகைக்கு எடுத்து, திருநங்கைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி  வந்துள்ளார்.  ரேணுகாவுக்கு தெரியாமல் ரிஷிகேஷுடன் திருநங்கை அனுஷ்கா நெருக்கமாக இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி அனுஷ்கா அவ்வப்போது பணம் கேட்டு ரிஷிகேஷ்க்கு தொந்தரவு கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் ரிஷிகேஷ் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த  அனுஷ்கா தன்னுடன் ரிஷிகேஷ் நெருக்கமாக இருந்த போட்டோக்களை ரேணுகாவிடம்  காண்பித்து விடுவதாக ரிஷிகேஷை மிரட்டினார். இதனால், கடந்த ஜூலை 25ம் தேதியன்று அனுஷ்காவை மகாராஜநகரில் உள்ள வீட்டிற்கு  தனியாக அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு மதுவை  ஊற்றிக் கொடுத்து ரிஷிகேஷ், அவரது கூட்டாளிகள் ஸ்நோவின் (29), செல்லத்துரை (26) ஆகிய 3 பேரும் சேர்ந்து அனுஷ்காவின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக்  கொன்று சாக்கு மூட்டையில் கக்கன்நகர் நான்கு வழிச்சாலை அருகேயுள்ள  கிணற்றில் வீசினர்.

முருகன், பவானிக்கு குழந்தை தத்தெடுத்து தருவதாக ரிஷிகேஷ் 3 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். பணத்தை திருப்பி கேட்டதால், முருகன்-பவானியை கொலை செய்ய ரிஷிகேஷ் திட்டமிட்டுள்ளார். இதனால், ஆக.8ம் தேதி குழந்தை தத்தெடுத்து தருவதாக கூறி முருகனை வரவைத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து சாக்குமூட்டையில்  அடைத்து மதுரை செல்லும் சாலையில் உள்ள மற்றொரு கிணற்றில் வீசியுள்ளார். அதன்பின்,  பவானியை கடந்த 18ம் தேதி அழைத்து வந்து கொலை செய்து  சாக்கு மூட்டையில் கட்டி முருகனின் உடலை வீசிய அதே கிணற்றில் வீசியுள்ளனர். 3 உடல்களை மீட்டுள்ளோம். இவ்வாறு கூறினார். இதையடுத்து ைஹகிரவுண்ட் போலீசார் வழக்குப்பதிந்து ரிஷிகேஷ், ஸ்நோவின்,  செல்லத்துரை ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

Tags : death ,Nellai ,murder ,Nellie , Sack, body, Nellie, 2 transgender, murder, 3 arrested
× RELATED நெல்லை மக்களவை தொகுதிக்கு அரசு...