திருவனந்தபுரம்: மூணாறு நிலச்சரிவில் 2 வயது சிறுமி உட்பட பல சடலங்களை கண்டுபிடிக்க உதவிய வளர்ப்பு நாயான ‘குவி’யை, கேரள போலீசின் துப்பறியும் நாய்ப்படை பிரிவில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் இதுவரை 63 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள சடலங்களை மீட்பதற்கான பணிகள் தொடர்கின்றன. இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியான 2 வயது சிறுமி தனுஷ்கா உட்பட பலருடைய சடலங்களை கண்டுபிடிக்க, சிறுமியின் வீட்டில் வளர்த்து வந்த ‘குவி’ என்ற நாய் உதவியது. தனுஷ்காவின் பாட்டி கருப்பாயி தவிர தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகிய 4 பேரும் நிலச்சரிவில் சிக்கி இறந்தனர்.
இவர்களை காணாமல் குவி நிலச்சரிவு நடந்த பிறகும் ஒருவாரம் அங்குமிங்கும் ேதடி வந்தது. இந்நிலையில், 8வது நாள் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 4 கி.மீட்டர் தொலைவில் ஆற்றை நோக்கி குவி குரைத்து கொண்டிருந்தது. இதை கவனித்த மீட்புப்படையினர் நாய் குரைத்த திசையில் பார்த்தபோது தனுஷ்காவின் உடல் மரத்தில் சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இந்த நாய், தனக்கு உணவு வழங்கிய போலீஸ் நாய் பராமரிப்பாளர் அஜித் மாதவனுடன் நெருக்கமானது. இதனால், அதை தனது செல்லப் பிராணியாக வளர்க்க அனுமதி கோரி இடுக்கி மாவட்ட கலெக்டர், எம்பி மற்றும் வன பாதுகாப்பு அமைப்புக்கு அவர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், இந்த நாயை ேகரள துப்பறியும் நாய்ப்படை பிரிவில் சேர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, இடுக்கி மாவட்ட எஸ்பி.க்கு டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து, ‘ேக-9’ என்ற துப்பறியும் நாய்ப்படை பிரிவில் குவி சேர்க்கப்பட உள்ளது.
உடல் பரிசோதனை
இடுக்கி மாவட்ட எஸ்பி கருப்பசாமி கூறுகையில், ‘‘குவியை கேரள போலீசின் கே 9 என்ற துப்பறியும் நாய்ப்படை பிரிவில் ேசர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக அதன் உடல்நிலை குறித்து பரிசோதனை நடத்தப்படும். அதன் பிறகு துப்பறியும் நாய்ப்படை பிரிவில் ேசர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்,’’ என்றார்.