சென்னை: காப்புக் காட்டில் பெண் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாகபோலீசார் ஒருவரை கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை தீவிரமாக தேடுகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே பூவலம்பேடு ஊராட்சி, வாணியமல்லி காப்பு காட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம் கிடந்தது. சடலத்தை போலீசார் கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தை சேர்ந்த விக்ரம் என்பவரின் தங்கை பிரியங்கா (34). இவருக்கு திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
வாணியமல்லி காப்பு காடு அருகே சென்னை மாதவரத்தை சேர்ந்த காட்வின் டொமினிக் என்பவரின் நாய் பண்ணையில் பிரியங்கா பராமரிப்பு பணிக்கு சேர்ந்துள்ளார். பிரியங்காவுடன் தொலைபேசியில் அவரது அண்ணன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே, ஒரு மாதமாக பிரியங்கா பேசாததால், கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் மூலமாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பிக்கு விக்ரம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ஒரு சிறுவன் அளித்த தகவலின்பேரில் காப்பு காட்டு பகுதியில் பிரியங்காவின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் 2 தனிப்படை போலீசார் மெர்லின் (19) என்பவரை பிடித்தனர்.
விசாரணையில் மெர்லின் போலீசாரிடம் கூறியதாவது: நாய் பண்ணை அருகே சொகுசு வீட்டில் வசிக்கும் விஜய் ஆனந்த் என்பவருடன் பிரியங்காவுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. கடந்த மாதம் பிரியங்காவை செல்போனில் அழைத்து, தனது வீட்டுக்கு விஜய் ஆனந்த் வரவழைத்தார். அவரது ஆசைக்கு பிரியங்கா இணங்காததால், அங்குள்ள நீச்சல்குளத்தில் தள்ளிவிட்டார். இதில் பிரியங்கா மூச்சுத்திணறி உயிரிழந்தார். பின்னர் அவரும், நானும், நாயர் என்பவருடன் சேர்ந்து, நாய் பண்ணை அருகே பிரியங்காவின் சடலத்தை பள்ளம் தோண்டி புதைத்துவிட்டோம்.
இவ்வாறு மெர்லின் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மெர்லினை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான விஜய் ஆனந்த், நாயர் ஆகிய இருவரையும் வலைவீசி தேடுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.