பெரம்பூர்: கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் பல்வேறு இந்து அமைப்புகளை அழைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது. ஊர்வலங்கள் நடத்த கூடாது. பெருந்தொற்று காலத்தில் நோய் பரவும் அபாயம் உள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை தவிர்க்கும் படி ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், ஓட்டேரி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் வடசென்னை பகுதியில் அதிகமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதும் வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் வழக்கம்போல விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட போவதாக இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி, இந்து சத்திய சேனா, இந்து மக்கள் முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு, தமிழ் மக்கள் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.