ஆரல்வாய்மொழி: தோவாளையில் திருவிதாங்கூர் மன்னர் வழிபட்ட பகவதியம்மன் கோயிலில் பீடத்தை உடைத்து வேல் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தோவாளை கிருஷ்ணன்கோவில் பகுதியில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தார் வழிபட்ட பகவதியம்மன் கோயில் உள்ளது. தற்போது இந்த கோயில் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு வைகாசி மாதம் கடைசி செவ்வாய்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.
பிற நாட்களில் பூஜாரி வந்து பூஜைகள் செய்வார். கடந்த பிப்ரவரி மாதம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஆதித்தவர்மா வந்து வழிபாடு செய்து விட்டு சென்றார்.
இந்த கோயிலில் உருவ வழிபாடு கிடையாது. பீடத்தில் வேல் வைத்து வழிபாடு நடத்தப்படும். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பூஜாரி பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோயிலுக்குள் வேல் இருந்த பீடம் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த வேல் மாயமாகி இருந்தது. இது குறித்து அந்த பகுதியில் தகவல் பரவியது. பொது மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். கோயிலுக்குள் புகுந்து வேலை திருடி சென்றவர்கள் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.