×

சென்னிமலை வடிவமைப்பாளர் அசத்தல் கிரிக்கெட் வீரர் தோனி உருவத்துடன் கைத்தறி போர்வை தயாரிப்பு

*அவருக்கு நினைவு பரிசாக வழங்க திட்டம்

சென்னிமலை : ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கைத்தறி வடிவமைப்பாளர் ஒருவர் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மகள் படத்துடன் தயாரிக்கப்பட்ட போர்வையை அவருக்கு நினைவுப்பரிசாக வழங்க திட்டமிட்டு உள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை கைத்தறி போர்வைகள் உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள சென்டெக்ஸ் கூட்டுறவு நிறுவனத்தில் அப்புசாமி என்பவர் போர்வை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறார். இவர் தனது ஓய்வு நேரங்களில் பிரபலங்களின் உருவம் பொறித்த கைக்கோர்வை போர்வை தயாரித்து அவர்களிடம் கொடுத்து சென்னிமலை கைத்தறி போர்வைகளின் பெருமையை நிலை நாட்டி வருகிறார்.

ஏற்கனவே இவர் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், சீன அதிபர் ஆகியோரின் படங்களை கைக்கோர்வை மூலம் போர்வைகளாக நெய்து வழங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்றார். தற்போது அவரை கவுரவிக்க தோனி மகளை கொஞ்சும் புகைப்படத்தை வைத்து அதேபோல தத்ரூபமாக கைக்கோர்வை மூலம் கைத்தறி போர்வையை அப்புசாமி நெய்து அசத்தி உள்ளார். 15 நாட்கள் தனிக்கவனம் செலுத்தி இதை அவர் வடிவமைத்துள்ளார். அந்த போர்வையை தோனியிடம் ஒப்படைக்க திட்டமிட்டு உள்ளதாக சென்னிமலை அப்புசாமி உற்சாகமாக தெரிவித்தார்.

Tags : Chennimalai ,Dhoni ,cricketer ,chennaimalai , Erode, Chennimalai, bedsheet, Dhoni image
× RELATED தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு...