தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் நேற்று முன்தினம் ஆய்வு செய்து, கொரோனா பாதிப்பு குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 5 சதவீதத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு உள்ளது. விரைவில் முற்றிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
தமிழகத்தில் தென்மாவட்டங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து தென்மாவட்ட அமைச்சர்கள் மதுரையை 2வது தலைநகராக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா காலத்தில் அரசு தனது சக்தியை மீறி செலவு செய்து வருகிறது. வருவாய் 25 சதவீதம் குறைந்தபோதும் 10 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்து கொரோனா போரை அரசு எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழலில் 2வது தலைநகர் குறித்த அறிவிப்புக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.