சென்னை: சென்னை வாழ் வானூர் எஸ்.சி, எஸ்.டி உறவின் முறைகள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கொரோனா பரவலை தடுக்க கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இங்கிருந்த காய்கறி கடைகள் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. பழ மார்க்கெட் மாதவரம் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 800 பழக்கடைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது மாதவரம் சந்தையில் 200 பழக்கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக மீதமுள்ள 600 பழ வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு மாதவரம் பஸ் நிலையத்தில் சுழற்சி முறையில் வியாபாரம் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் சங்கம் அளித்த மனுவை மூன்று வாரத்தில் பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.