×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மதிமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் தொடர்ந்தது. அதே போல மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட 2 பேர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு மனு அளித்திருந்தனர். இந்த வழக்குகளின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். இந்த தீர்ப்பு பல தரப்பினரிடையே வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக கூறிய ஸ்டெர்லைட் சிஇஓ சட்ட ரீதியான போராட்டத்தை தொடருவோம் என கூறினார்.

அதனால் ஸ்டெர்லைட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், எங்களது கருத்துக்களையும் கேட்கக்கோரி தமிழக அரசும் தூத்துக்குடி மக்கள் அதிகார அமைப்பினரும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி இல்லை என வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து ஆகஸ்ட் 18ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்று கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆரம்பம் முதல் இந்நாள் வரை ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வந்துகொண்டிருக்கிறார்.

இந்த ஆலைக்கு எதிராக சுமார் கால் நூற்றாண்டாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை வைகோ தலைமை தாங்கி நடத்தியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் பசுமைத் தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களிலும் வைகோவே நேரில் ஆஜராகி வாதிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதால், வைகோ, தன்னுடைய கருத்தைக் கேட்காமல் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தாக்கல் செய்யும் மேல் முறையீட்டு வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” என்று உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 ரிட் மனுக்களை தாக்கல் செய்து, அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எல்லா வழக்குகளிலும் வைகோ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Vaiko ,Thoothukudi Sterlite ,Supreme Court ,Madhimuga ,General Secretary ,MDMK , Sterlite Plant, Madhyamaka, Vaiko, Supreme Court, Caveat Petition
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...