சென்னை: ஒரே நாடு, ஒரே பணியாளர் தேர்வு முகமை திட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைக்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய பணியாளர் தேர்வு முகமை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்போது இதற்கு கல்வியாளர்களும், மதிமுக பொதுச் செயலாளர் வைக்கோவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைக்கோ ஒரே நாடு...ஒரே மொழி, ஒரே நாடு...ஒரே ரேஷன் வரிசையில் பாஜக அரசின் சூழ்ச்சி நிறைந்த வஞ்சகத் திட்டம் இது என்று விமர்சித்துள்ளார். மத்திய பணியாளர் நடத்தும் தேர்வு முகமை மூலம் தகுதி தேர்வு அடிப்படையில், மத்திய மாநில அரசுகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதை வைக்கோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வுகள் நடத்தி தமிழ்நாடு அரசு பணியிடங்கள் நியமனம் செய்வது ஒழித்துக்கட்டப்படும் என்றார். இதன் காரணமாக வடமாநிலத்தவர்கள் அதிகளவில் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படும் நிலைமை உருவாகும் என்றும் பொதுச் செயலாளர் வைக்கோ எச்சரித்துள்ளார். இதனைத் தடுக்க தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீத பணிகள் தமிழர்களுக்கே என்று அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.