×

ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான அலைக்கற்றையைப் பெற மீண்டும் விண்ணப்பம்

மும்பை: ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான அலைக்கற்றையைப் பெற புதிய விண்ணப்பங்களை மீண்டும் அனுப்ப உள்ளன. இந்தியாவில் 5ஜி சேவையைச் சோதித்துப் பார்க்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளன. ஏர்டெல் ஏற்கெனவே அளித்துள்ள விண்ணப்பத்தில் சீனாவின் ஹுவேய், இசட் டி இ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 5ஜி சேவையை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

லடாக்கில் சீனாவுடனான மோதலுக்குப் பின் சீன நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்ற திட்டங்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு காரணமாக ஒப்புதல் அளிக்க மத்திய அரசு தயங்கி வருகிறது. இந்நிலையில் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காகச் சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அளிக்க உள்ளன.

முன்னதாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஜியோ 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கிறது, விரைவில் இதற்கான சோதனை துவங்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார். இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் கிடைக்கும் போது ஜியோவின் மேடு இன் இந்தியா 5ஜி நெட்வொர்க் தயார் நிலையில் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு இதன் சேவைகள் துவங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். முதற்கட்டமாக இந்திய சந்தையில் வெளியானதும், வெளிநாடுகளுக்கும் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.



Tags : Vodafone ,Airtel , Airtel, Vodafone
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...