×

யெஸ் வங்கி மோசடி: அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கில் வாதவாண் சகோதரர்களுக்கு ஜாமீன்

மும்பை: யெஸ் வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கபில் வாதவாண், தீரஜ் வாதவாண் ஆகியோருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால் சிபிஐ வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளதால் இவர்கள் சிறையில் இருந்து வெளிவர இயலாது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இருவர் மீதும் அமலாக்கத்துறை 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தினால் நீதிபதி ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கவும், ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தவும் கோர்ட் உத்தரவிட்டது. இதே வழக்கில் சிபிஐயும் இவர்களை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து வழக்கு தொடர்ந்திருப்பதால் இவர்கள் ஜாமீன் கிடைத்தாலும் சிறையிலிருந்து வெளியே வர முடியாது. யெஸ் வங்கி மோசடி வழக்கில் வாதவாண் சகோதரர்களை அமலாக்கத்துறை மே 14ம் தேதி கைது செய்தது.

இந்நிலையில் வாதவாண் சகோதரர்கள், யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர், மனைவி பிந்து கபூர், மகள்கள் ரோஷ்ணி, ரேகா ஆகியோர் மீது அமலாக்கத்துறை ஜூலை 15-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. மார்ச் 7ல் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு அமலாக்கத்துறை இந்த வழக்கில் விசாரணையை தொடங்கியது. சந்தேகத்துக்கிடமான கடன்களை வழங்கி பணத்தை சுருட்டியதாக இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Vadhavan ,Yes Bank , Yes Bank, Vadhavan, Bail
× RELATED ஜீ குழுமத்தின் ரூ.5,000 கோடி கடனை தள்ளுபடி செய்தது யெஸ் வங்கி