புதுடெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச வசதியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. மற்றொரு பக்கம் கொரோனா சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 13ம் தேதி பிரணாப்பின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார்.
சுயநினைவின்றி(கோமா நிலையில்) உள்ள அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நாளுக்கு நாள் பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் மூலம் பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம், நுரையீரலில் நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.