காரைக்குடி : காரைக்குடியில் புதர்மண்டி கிடந்த காந்திமண்டபத்தை இளைஞர்கள் தூய்மைப்படுத்தி உள்ளனர். காரைக்குடி நகரின் மையப்பகுதியில் நகராட்சி கட்டுப்பாட்டில் மகர்நோன்பு திடல் பகுதி உள்ளது. இங்குள்ள காந்தி மண்டபத்தை சுற்றி முட்புதர் மண்டி கிடந்தது. மேலும், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கான மண், கல் மற்றும் சிமென்ட் குழாய்களை திடல் முழுவதும் போட்டு வைத்திருந்தனர். இந்த மண்டபத்தை ‘குடிமகன்கள்’ திறந்தவெளி பாராக பயன்படுத்தி வந்தனர். மண்டபத்தை தூய்மைப்படுத்த பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மண்டபத்தை தூய்மைப்படுத்தி உள்ளனர். அப்போது 500க்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்களையும் எடுத்துள்ளனர். இதுகுறித்து தூய்மைப்பணியில் ஈடுபட்ட நசீர் கூறுகையில், ‘‘காந்தி மண்டபத்தை சுற்றிலும் காலி மதுபாட்டில்களை அதிகளவில் எடுத்தது வருத்தமளித்தது. சமூக விரோதிகள் உள்ளே செல்லாமல் இருக்க மண்டபத்தை சுற்றி வேலி அமைத்து படிப்பகமாகவோ அல்லது நூலகமாகவோ மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம்’’ என்றார்.