புதுடெல்லி : நகர்புற நடைபாதை வியாபாரிகள் ₹10 ஆயிரம் கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை செய்வதற்காக பிரத்யேக மொபைல் செயலியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா நெருக்கடியால் நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு ₹10 ஆயிரம் கடன் உதவியை வழங்குகிறது. இந்த கடன் தொகையை மாத தவணையாக ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்தலாம்.
இந்த கடனுக்கு விண்ணப்பிக்க, தனியாக மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கள் நடைபாதை வியாபாரிகளிடம் இருந்து கடன் விண்ணப்பங்களை பெறும் வகையில், இந்த புதிய செயலியை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார். கடந்த ஜூலை 2ம் தேதி இந்த கடன் பெறுவதற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதில் தற்போது வரை 5.68 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.இதில், 1.3 லட்சம் பேர் கடன் பெற்றுள்ளனர்.