சென்னை: தமிழ்நாட்டில், ஐடிபிஐ வங்கி `ஸ்வர்ண கலஷ்’ என்ற பெயரில் இரண்டு சிறப்பு தங்க நகைக்கடன் கிளைகளை மறுவடிவமைத்து நீலமங்கலம் மற்றும் சிவகங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி கிளைகளின் திறப்பு விழாவில் தமிழ்நாடு மண்டலத்தின் தலைமைப் பொது மேலாளர் விசாலாட்சி வசந்தன் கலந்துகொண்டு பேசுகையில், “தங்க நகைக்கடனுக்கான தேவை சந்தையில் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த `ஸ்வர்ண கலஷ்’ சிறப்பு தங்க நகைக்கடன் கிளைகளை அறிமுகம் செய்துள்ளோம். சந்தையில் உள்ள கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், எங்கள் வாடிக்கையாளர்கள் எளிதாக அணுகுவதற்கும், இதுபோன்ற சிறப்பு கிளைகளை உருவாக்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
இந்த கிளைகள் மூலம், ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.50 லட்சம் வரையிலான தங்க நகைக்கடன்களை விரைவாகவும், வெளிப்படையாகவும் மற்றும் சிரமமில்லாமல் பெறுவதற்கும், வேளாண்மை, முன்னுரிமைத் துறை கடன் மற்றும் கிராமப்புற சந்தைகளில் அதிகரித்து வரும் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இந்த கிளைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். சென்னை மண்டலத்தில் உள்ள ஐடிபிஐ வங்கியின் 114 கிளைகளிலும் தங்க நகைக் கடன் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற சிறப்பு தங்க நகைக்கடன் கிளைகளை, மேலும் சில மையங்களில் எதிர்காலத்தில் தொடங்க ஐடிபிஐ வங்கி திட்டமிட்டுள்ளது” என்றார்.