×

மாயமான மனைவி குறித்து பதில் சொல்லாததால் ஆத்திரம் கள்ளக்காதலனின் மாமனார் அடித்து கொலை: கூலித் தொழிலாளிக்கு போலீஸ் வலை

சென்னை: மாயமான மனைவி குறித்து பதில் சொல்லாததால் ஆத்திரமடைந்த கூலி தொழிலாளி, தனது மனைவியின் கள்ளக்காதலன் மாமனாரை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்தார். ஜாபர்கான்பேட்டை ஆர்.பி.நகரை சேர்ந்தவர் கணேசன்(28). கூலித் தொழிலாளி. குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததால், இவரது மனைவிக்கு அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் கணேசன் வீட்டில் இல்லாத நேரத்தில் தினேஷ் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு கணேசன் மனைவி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் மனைவியை தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதேநேரம் தினேஷ் வீட்டில் இருப்பதாக கணேசனுக்கு தகவல் கிடைத்தது. இதனால் கணேசன் நேற்று முன்தினம் இரவு தினேஷ் வீட்டிற்கு போதையில் சென்றார். அங்கு தினேஷ் மாமனார் புண்ணியகோடி (70) மட்டும் தனியாக இருந்தார். அப்போது, அவரிடம், “உனது மருமகன் தினேஷ் எனது மனைவியை எங்க ஒளித்துவைத்து இருக்கிறான்” என்று கேட்டார். அதற்கு புண்ணியகோடி, “எனக்கு தெரியாது. தினேஷ் வழக்கு ஒன்றில் சிறையில் இருக்கிறான்” என்று கூறினார். ஆனால் கணேசன் அதை கேட்காமல் தொடர்ந்து அவரிடம் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதில், ஆத்திரமடைந்த கணேசன் கையில் வைத்திருந்த உருட்டு கட்டையால் புண்ணியகோடியை சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த புண்ணியகோடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கணேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த தகவலின்படி குமரன் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புண்ணியகோடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கணேசனை தேடி வருகின்றனர்.

Tags : death ,father-in-law ,lover , Magical wife, angry at not answering, false lover, father-in-law, beaten to death, mercenary, police web
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு