டெல்லி: இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் 2 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக ராகுல்காந்தி டிவிட்டரில் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில்: ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை சம்பள ஊழியர்கள் 1.89 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ஏப்ரல் மாதத்தில் 1.77 கோடி பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 லட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கும் ஜூலையில் 50 லட்சம் பேருக்கும் பணியிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 12.15 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதில், சிறு வணிகர்கள், தினக்கூலிகள், தெருவில் கூவி விற்பவர்களில் 9 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்திருந்தது.
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து நாளேடுகளில் வந்த செய்தியை தனது ட்விட்டர் பதிவில் இணைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.
இதனால் 2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் மூழ்கி உள்ளது. வேலையின்மை, பொருளாதார சீரழிவின் உண்மையை இந்திய மக்களிடம் இருந்து மறைக்க முடியாது. பேஸ்புக்கில் போலி செய்திகளையும், வெறுப்புகளையம் பரப்புவதன் மூலம், உண்மையை மக்களிடம் இருந்து மறைக்க முடியாது என பதிவிட்டு மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.