சென்னை: சென்னையில் பல பெண்களிடம் முகநூல் மூலம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பணம் நகைகளை பறித்த மோசடி மன்னனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வேப்பேரி போலீசார் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த தினேஷ் என்ற மோசடி மன்னனை கைது செய்தனர். தினேஷிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆடிய சதுரங்க வேட்டைகள் போலீசாரையே மலைக்க வைத்துள்ளன. தினேஷ் கைதானது தெரிந்ததும் அவனிடம் ஏமாந்தவர்கள் வேப்பேரி காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களிடம் முகநூல் மூலம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு குடும்ப நண்பராகவே மாறிவிடும் தினேஷ், பின்னர் பணம் அல்லது நகைகளை பறித்து கொண்டு தலைமறைவாகிவிடுவதாக பல காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கீழ்ப்பாக்கத்தில் ஒரு பெண்ணிடம் ஐபோன் வாங்கி விற்பனை செய்யலாம் என்று கூறி இரண்டரை லட்சம் மோசடி செய்த தினேஷ், திருவல்லிக்கேணியில் குடும்ப நண்பர் போல் பழகிய பெண்ணின் வீட்டில் இருந்து 30 சவரன் நகையை திருடியதாகவும் புகார் உள்ளது. விமான நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறியும் தினேஷ் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மோசடியில் ஈடுபடவே, விமான பணியாட்களுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து பலருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டதையும் தினேஷ் போலீஸ் விசாரணையில் ஒப்பு கொண்டுள்ளார்.
காவல் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் பணம் பறித்த தினேஷ், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோடி கணக்கான ரூபாய் மோசடி செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த தினேஷ், ஒவ்வொரு மோசடி செயலுக்கு பின்னரும் சிலகாலம் தலைமறைவாகவே வாழ்ந்ததையும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். தற்போது மோசடி மன்னன் தினேஷை வேப்பேரி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.