புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாச வசதியுடன் பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. மற்றொரு பக்கம் கொரோனா சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த 13-ம் தேதி பிரணாப்பின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார். சுயநினைவின்றி(கோமா நிலையில்) உள்ள அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது, என டெல்லி ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், நாளுக்கு நாள் பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், எனது தந்தை பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது. தந்தையின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. அவரது முன்னேற்றத்தின் நேர்மறையான அறிகுறிகள் கவனிக்கப்பட்டன என பதிவிட்டுள்ளார்.