மதுரை: திருச்சியில் காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடி மார்க்கெட்டை செயல்படுத்தவும் உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். கொரோனா பரவல் காரணமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்போது செயல்படுகிறது.
காந்தி மார்க்கெட் திறக்கப்பட்டால் கொரோனா பரவலுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். கள்ளிக்குடி மார்க்கெட்டில் சமூக விலகலை பின்பற்ற போதுமான இடவசதி உள்ளது என்று மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி தகவல் அளித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு வழக்கு விசாரணையை செப்டம்பர் 14க்கு ஒத்திவைத்தனர்.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது காய்கறி மொத்த விற்பனை சந்தை பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்திலும், சில்லறை விற்பனை சந்தைகள் மாநகரில் 10 இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.