டெல்லி: நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 7 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக 876 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 51,797 உயர்ந்துள்ளது.
நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 27,02,742 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 71.91 ஆகும். இதுவரை மொத்தம் 19,77,779 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 6,73,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தாலும் தொற்றிலிருந்து குணமடைவோரிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 19.70 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது எனவும் கூறினார்.