×

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்...!! ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை!!!

திருவள்ளூர்:  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வாகனங்களை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டமானது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் கள்ளக்குறிச்சியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தங்களது 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்று அவர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.

Tags : Auto drivers ,Tamil Nadu , Tamil Nadu, Auto Drivers, Demonstration
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...