வருசநாடு: மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறையால், கடமலை-மயிலை ஒன்றியத்தில் செங்கல் சூளைத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், உப்புத்துறை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம் ஆகிய ஊர்களில் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. கொரோனா பரவலுக்கு முன் தினசரி நடந்து வந்த இந்த தொழில் தற்போது முடங்கிக் கிடக்கிறது. செங்கல் தயாரிப்புக்கு தேவையான செம்மண், களிமண் விலை அதிகரித்துள்ளது. செங்கல் விலை தற்போது 4 முதல் 5 ரூபாய் வரை விற்பனையாகிறது.
கொரோனாவால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், செங்கலுக்கான தேவையும் குறைந்து வருகிறது. மேலும், கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால் தொழிலாளர்கள் அச்சத்தால் வேலைக்கு வருவதில்லை என கூறுகின்றனர். தங்கம்மாள்புரம் சூளைவனம் கூறுகையில், ‘செங்கல் தயாரிப்புக்கு தேவையான செம்மண், களிமண், விறகு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. தொழிலாளர்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் செங்கல் சூளை தொழில் நலிவடைந்து வருகிறது. இந்த தொழில் நடத்துபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.