×

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் சுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் கடிதம்

டெல்லி: பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் சுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய நிர்வாகம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய நிர்வாகத்தை கலைக்கவும் காங்கிரஸ் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகிய சமூகவலைதளங்களை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்று பதிவிட்டார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் தங்களது சொந்த கட்சியில் உள்ள தலைவர்களை கூட கட்டுப்படுத்த முடியாதவர்கள் முழு உலகத்தையும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்டுப்படுத்துவதாக கூச்சலிடுகின்றனர் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து பேஸ்புக் தரப்பில், யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ, அதிகாரத்தையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல் பேஸ்புக் பாரபட்சமின்றி செயல்படுகிறது. எந்த காரணத்திற்காகவும் நிறுவனத்தின் கொள்கைகளை கைவிடவில்லை என்று தெரிவித்தது. வன்முறையை தூண்டும் வகையிலான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்களை நாங்கள் தடை செய்கிறோம். எந்த ஒரு நபரின் அரசியல் அதிகாரம், கட்சி சார்பு பற்றி கவலையின்றி உலக அளவில், எங்களது கொள்கைகளை நாங்கள் திடமாக அமல்படுத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் சுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.



Tags : Mark Zuckerberg ,Congress ,Facebook , Facebook, Congress, letter
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...