ஹாங்காங்: ஹாங்காங்கில் ஏர் இந்தியாவின் வந்தே பாரத் விமானங்களை இயக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு சென்ற இந்தியர்கள் ஆங்காங்கே முடங்கும் சூழல் உருவானது. அவர்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்தியா கொண்டு வர வந்தே பாரத் திட்டம் துவங்கப்பட்டது. மே 7ம் தேதி துவங்கிய இந்த திட்டம் 4 கட்டங்களை நிறைவு செய்துள்ளது. 300 சர்வதேச விமானங்கள் மற்றும் 70 உள்நாட்டு விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த 11ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து சுமார் 10.50 லட்சம் இந்தியர்களை வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு தாயகம் அழைத்து வந்துள்ளது.
இந்நிலையில், ஹாங்காங்கில் ஏர் இந்தியாவின் வந்தே பாரத் விமானங்களை இயக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான பயணங்களுக்கு முன்பாக முறையான கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இன்று முதல் 31ம் தேதி வரை விமானங்களுக்கு தடை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஹாங்காங்கில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து ஹாங்காங்கிற்கும் சிறப்பு விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து 14ம் தேதி ஹாங்காங் வந்த விமானத்தில் பயணித்தவர்களில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.